https://republictn.com/

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் கிராமம் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் மோதியது. அதன் பின்னர் எதிர்திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், இரு பேருந்துகளிலும் பயணம் செய்த நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அரசு பேருந்தின் மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் சாலையின் இடதுபுறமாகச் சென்று, வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது. இதில் அந்த நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 41 பேரும் மீட்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago