நடிகர் சிலம்பரசன் (சிம்பு) மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் முக்கியமான நீண்ட இரவுப் படப்பிடிப்பு ஷெட்யூல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கிய இந்த இரவுப் படப்பிடிப்பு, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நள்ளிரவு நேரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த முக்கியமான ஷெட்யூல் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெற்றிமாறனுடன் கைகுலுக்கும் வீடியோ ஒன்றை சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், “தொடர்ச்சியான இரவுப் படப்பிடிப்புகளால் எனது உடலின் தூக்கச் சுழற்சி முற்றிலும் மாறிவிட்டது. இப்போது சிறிது ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் பகல் நேர வாழ்க்கைக்கு திரும்பி அடுத்தகட்ட பயணத்திற்குத் தயாராக இது சரியான நேரம்” என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்த நீண்ட இரவுப் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சியையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த திரைப்படம், வெற்றிமாறனின் ‘வடசென்னை’ திரைப்பட உலகத்துடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த இரண்டு மாத கால இரவுப் படப்பிடிப்பில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் சண்டைக் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய் சேதுபதி, பிரியங்கா அருள் மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி மிரட்டலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்கு அனிருத் இசையமைக்க, வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.
இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு, ‘அரசன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
