மத்திய பிரதேச மாநிலத்தின் பந்தூர்னா மாவட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொட்டலத்தில் குட்டிப் பாம்பு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்தூர்னா மாவட்டம், கார்காட் கம்டி கிராமத்தைச் சேர்ந்த மச்சலாபாய் துர்பே என்பவர் கர்ப்பிணியாக உள்ளார். இவர், கிராம அங்கன்வாடி மையம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை பெற சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
வீட்டில் அவரது குடும்பத்தினர் அந்த உணவுப் பொட்டலத்தை திறந்து பார்த்தபோது, அதற்குள் குட்டிப் பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கிராம மக்கள் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், திட்ட அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொட்டலத்தை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரத்தை தவறாமல் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
