தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, நாகரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட மங்களபுரம் அருகே உள்ள கிளைப்பட்டிப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்து வரும் விவசாயி. தற்போது தனது வயலில் பருத்தி பயிரிட்டுள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள முடிகொண்டான் ஆற்றுப்படுகையில் கடந்த ஒரு வாரமாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நாச்சியார் கோவில் காவல் நிலையம், மாவட்ட கனிம வளத்துறை, வருவாய்த் துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சங்கரின் விவசாய நிலத்திற்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் சுமார் 20 அடி ஆழத்திற்கு மணல் தோண்டப்பட்டிருந்ததாகவும், அதனை அவர் பலமுறை தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தனது வயலைப் பார்வையிடச் சென்ற சங்கர், ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியை மேலும் சுமார் 10 அடி ஆழப்படுத்தி, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருவதை கண்டு அதனைத் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, இடத்தின் உரிமையாளர், அவரது மகன், ஜேசிபி ஓட்டுநர் மற்றும் டிராக்டர் ஓட்டுநர் உள்ளிட்டோர் சேர்ந்து சங்கரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட் மூலம் அவரது உடலில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டதில், இடுப்பு மற்றும் நரம்புப் பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மணல் அள்ளியதால் உருவான ஆழமான குழிக்குள் சங்கரைத் தள்ளிவிட்டு, ஜேசிபி மூலம் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
சங்கரின் அலறல் சத்தம் கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி அங்கு விரைந்து வந்து கூச்சலிட்டார். இதையடுத்து கிராம மக்கள் சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மணல் கொள்ளையர்கள், ஜேசிபி மற்றும் டிராக்டர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், மண்ணுக்குள் பாதியளவு புதைந்திருந்த சங்கரை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற விவசாயியை ஜேசிபி மூலம் தாக்கி, மண்ணுக்குள் புதைக்க முயன்ற இந்தச் சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயி சங்கர் அளித்த பேட்டி:

“என்னுடைய வயலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றுப்படுகையில் கடந்த ஒரு மாதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது தெரியாமல் இருந்தது. இன்று வயலைப் பார்க்கச் சென்றபோது ஜேசிபி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருப்பதை பார்த்தேன். கிட்டத்தட்ட 25 அடி ஆழத்திற்கு மணல் தோண்டி வைத்திருந்தார்கள். ஒரு வாரமாக தொடர்ந்து மணலை லாரிகளில் ஏற்றி விற்றுக் கொண்டிருந்தார்கள்.
அதை நான் தட்டிக்கேட்டேன். அதற்காக நிலத்தின் உரிமையாளர், அவரது மகன், ஜேசிபி ஓட்டுநர், டிராக்டர் ஓட்டுநர் உள்ளிட்டோர் சேர்ந்து என்னைத் தாக்கினர். நான் நடந்ததை வீடியோவாக பதிவு செய்தேன். ‘யாரும் இங்கிருந்து போகக் கூடாது’ என்று கூறியவுடன், ஜேசிபி பக்கெட்டால் என்னை பலமாக அடித்தனர்.
அதனால் எனக்கு நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இடுப்பை அசைக்க முடியவில்லை. பின்னர் என்னை குழிக்குள் தள்ளி, மண்ணால் மூடி உயிருடன் புதைக்க முயன்றனர். கிராம மக்கள் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றியதால் தான் நான் உயிர் பிழைத்தேன்,” என்று சங்கர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
