https://republictn.com/

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் மதுமிதா, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஆபாசமாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கயல்விழியன் என்ற வாலிபர், கடந்த 2024 டிசம்பரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்தச் சிறுமி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அவரது தாயார் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அவர்களுடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதாவும் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியை ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்ப மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ஸ்கேன் மையத்திற்குள் மதுமிதாவும் செல்ல முயன்றுள்ளார். இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்போது தன்னை சிறுமியின் தாய் எனக் கூறி உள்ளே செல்ல முயன்றதாகவும், சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதுமிதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, மருத்துவப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து மருத்துவமனை வளாகத்தில் கடும் ரகளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுமிதாவை கைது செய்தனர்.

மதுமிதா ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுடன் தகராறில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்போது மாணவிகளை ஆபாசமாகப் பேசி மிரட்டியதாகவும், அதுதொடர்பாக போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டது தொடர்பாகவும் அவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இதுவரை பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்துள்ள மதுமிதா, தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், சிறுமியை இரண்டாவது முறையாக கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் கயல்விழியன் தொடர்பாகவும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago