https://republictn.com/

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியிலுள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (72). இவர் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை தீபாவின் தந்தை ஆவார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

அத்துடன், முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து கோவில் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார். கோவில் அருகே பெருந்தலைவர் காமராஜரின் சிலை அமைக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் பணிகள் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் இன்று காலை புலவர் கணேசன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தமிட்டு தடுக்க முயன்றதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் புலவர் கணேசனின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. உயிருக்கு போராடிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ், கார்த்திக், இசக்கி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago