சென்னையில் நடைபெற்ற ஜென்சி மீட் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞர்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்தில் பங்கேற்க வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சென்னையில் நடைபெற்ற ஜென்சி மீட்டை அரசியல் தலைவர்கள் முதல் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வரை அனைவரும் கவனித்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த நிகழ்வு சென்றடைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடிய இந்த நிகழ்வை இழிவுபடுத்தும் வகையில், நேற்றைய பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். ‘1500 ரூபாய் கொடுத்துதான் இந்த கூட்டத்திற்கு இளைஞர்களை அழைத்தனர்’ என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் மேலும், ‘சில இளைஞர்கள் என்னிடம் அனுமதி கேட்டார்கள்; நான் பங்கேற்க அனுமதித்தேன்’ என்றும் கூறியுள்ளார். ஆனால், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரின் பெயர், தொடர்பு எண், ஊர் மற்றும் பிற விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இணையதளம் மூலமும் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
1250-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது 1500 ரூபாய் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிரூபித்தால், தமிழ்நாடு முழுவதும் ஜென்சி மீட் நிகழ்ச்சிகளை இனி நடத்துவதை நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் கூற விரும்புகிறோம். நீங்கள் யாரும் பணம் வாங்கிக்கொண்டு வரவில்லை என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஒரு அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக பரப்பப்படுகின்றன. அதிலும், ஒரு அமைச்சரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பது கவலைக்குரியது.
இந்த சவாலை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்றுக்கொண்டு, தனது குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
