சென்னை ராமாபுரம் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த தச்சர் முருகன் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமாபுரத்தில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி வசித்து வரும் 21 வயதுடைய ஐடி நிறுவன பெண் ஊழியர், ஜூன் 5ஆம் தேதி அதிகாலை வேலை முடிந்து தனது தோழியுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த நபர், பெண் தனது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது, செல்போனில் இருந்த ஆபாச வீடியோவைக் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தமிட்டு தனது நண்பர்களை அழைக்க முயன்றதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குற்றச்செயலில் ஈடுபட்டது மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பும் முருகன் இதேபோன்று மற்றொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல்துறை உதவி எண்களிலோ புகார் அளிக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
