https://republictn.com/

தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களின் 56 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொட்டைக்குடி மலை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாத காரணத்தால், கிராம மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து குரங்கணி பகுதிக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த மலை கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கிராம மக்களின் 56 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கொட்டைக்குடி மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பேருந்து சேவையால் மலைக் கிராமங்களில் வாழும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைய உள்ளனர்.

பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்துத் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து இந்த சேவையை செயல்படுத்தியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், பேருந்தை உற்சாகமாக வரவேற்று, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சிரமம் நீங்கி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்கு செல்வது எளிதாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago