தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க-விற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய ‘கள ஆய்வு’ என்ற பெயரில் தி.மு.க தலைமை நடத்தும் ஆலோசனைக் கூட்டங்கள், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், செய்தித் தொடர்பாளர்களிடையே பெரும் குமுறலையும் அதிருப்தியையுமே ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கள ஆய்வு என்ற பெயரில், எழுதி வைத்ததை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசிச்சென்றதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கடும் அப்செடாகி உள்ளனர். சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து ஆராய கள ஆய்வு குழுக்களை, ஸ்டாலின் நியமித்துள்ளார். இது தொடர்பாக, கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் 23 பேருடன், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, தி.மு.க., செய்தி தொடர்பாளர்கள் சிலர் கூறுகையில், ”கட்சி கொள்கைகளை பரப்பும் நிர்வாகிகளுடன், மு.க.ஸ்டாலினும். உதயநிதி ஸ்டாலினும் ஆலோசனை செய்ய உள்ளதாக எங்களை அழைத்தனர். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் இருந்தபோது ஒருமுறை கூட, எங்களை அழைத்து பேசியதே இல்லை. தோல்விக்கு பின்பாவது, அழைக்கிறார்களே என ஆவலோடு சென்றோம். ஆனால், தன் மனதில் இருந்து ஒரு வார்த்தையை கூட மு.க.ஸ்டாலின் பேசவில்லை.
அவரது உதவியாளர் தினேஷ் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்தார். அப்போதே, வெறும் கண்துடைப்பு கூட்டம் என்பது தெளிவானது. பின்னர், எங்களை பேச அழைத்தனர். அதையும் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் காது கொடுத்தே கேட்கவில்லை. திமுகவின் அடிநாதமே கள அரசியல் தான். அதை உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும்’ என ஒருவர் கேட்டுக்கொண்டார். அப்போது, ‘விஜய், கள அரசியல் செய்து தான் முதல்வரானாரா? பிரச்னை சார்ந்து அரசியல் செய்தால் போதும்’ என உதயநிதி ஸ்டாலின் கூறி விட்டார்.
இப்படி செயல் திட்டங்கள் குறித்து பேசும்போதெல்லாம், தடை போட்டுக் கொண்டே இருந்தனர். இறுதியாக அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகங்களை எப்படி கையாள வேண்டும் என பாடம் எடுக்கப்பட்டது. இதைத்தான், ஆட்சியில் இருந்தபோது, சபரீஸனின் பென் நிறுவனம் செய்தது. மீடியாக்களை கவர்வதை விட, மக்களை கவர வேண்டும் என்ற எதார்த்தம், தலைமைக்கு இன்னமும் புரியவில்லை. இந்த பணியை செய்ய பரந்தாமன், அபிசுல்லா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ஆனால், அதற்காக ஒரு வாட்ஸ்-அப் குழு கூட இன்னும் அமைக்கவில்லை. எந்த தொலைக்காட்சியில், யார் பேச வேண்டும்? என்பதை தீர்மானிக்க பலவேசம் என்பவரை நியமித்துள்ளனர். ஆட்சியில் இருந்த போதும், இவர் தான் இந்த பணியை மேற்கொண்டார். மீண்டும் அவரிடமே பணியை கொடுத்துள்ளனர். இவ்வளவு பெரிய தோல்விக்கு பின்னும், தலைமை பாடம் கற்கவில்லை” எனக் குமுறுகின்றனர்.]
