தமிழ்நாடு காவல்துறை பாலியல் குற்றவாளிகளை தீவிரமாகக் கண்காணிக்க “ஸ்பெக்ட்ரம்” (SPECTRUM) என்ற புதிய வண்ணக் குறியீட்டு (Color-coded) முறையை அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 15,000 குற்றவாளிகள் இந்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளின் குற்றத் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் அவர்கள் 8 வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
சிவப்பு (Red): கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மற்றும் மீண்டும் மீண்டும் போக்சோ (POCSO) சட்டத்தில் கைதான மிக ஆபத்தான குற்றவாளிகள்.
ஆரஞ்சு (Orange): பெண்களை தொடர்ந்து துன்புறுத்துவோர், தொடர் ஸ்டாக்கர்கள் (Habitual Stalkers) மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள்.
நீலம் (Blue): ஆன்லைன் வழி ஏமாற்றுதல், சைபர் ஸ்டாக்கிங் மற்றும் செக்ஸ்டார்ஷன் (Sextortion) போன்ற சைபர் பாலியல் குற்றவாளிகள்.
ஊதா (Purple): ஒரே பாலின டேட்டிங் செயலிகளை (Grindr போன்றவை) தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பாலியல் அச்சுறுத்தல் செய்பவர்கள்.
கருப்பு (Black): மனிதக் கடத்தல், விபச்சார நெட்வொர்க் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் குற்றக் கும்பல்கள்.
வெள்ளி (Silver): பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் (Juveniles). இவர்களுக்கு பெற்றோர் முன்னிலையில் மனநல ஆலோசனை வழங்கி சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இளஞ்சிவப்பு (Pink): பெண்களை கேலி செய்பவர்கள் (Eve-teasers) மற்றும் உடல் தொடர்பில்லாத பாலியல் தொந்தரவு செய்பவர்கள்.
பச்சை (Green): குறைந்த ஆபத்துள்ள மற்றும் முதல்முறை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள்.
குற்றவாளிகளின் கைரேகைகள், ஐரிஸ் (Iris) கண் ஸ்கேன், உள்ளங்கை ரேகைகள் மற்றும் உயர்தர புகைப்படங்கள் “மெஷர்மென்ட் கேப்சரிங் யூனிட்” (MCU) மூலம் சேகரிக்கப்படுகின்றன.
சிவப்பு மற்றும் ஆரஞ்சு பிரிவில் உள்ளவர்களின் மொபைல் போன் பயன்பாடு, சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் பரோல் நிலவரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 126-ன் கீழ் இவர்களிடமிருந்து நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்படுகிறது. மேலும், இவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஒரு முக்கியமான தடுப்பு காவல் (Preventive Policing) முயற்சியாகக் கருதப்படுகிறது.
