டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இன்று சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் மதுபானப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன்படி, செந்தில் பாலாஜி இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்கியது, மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபானப் போக்குவரத்துக்கான டெண்டர்களில் முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன.
இந்த முறைகேடுகள், செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது, குறிப்பிட்ட நபர்களுக்கு சாதகமாக டெண்டர்களை ஒதுக்கியது மற்றும் மதுபானப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு செய்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடுகளில் சுமார் ரூ.17.27 கோடி வரை பணம் கைமாறியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட MRP-ஐ விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.500 வரையும் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூடுதல் வசூல் மூலம் கிடைத்த பணம் அரசியல் நிதியாக கைமாறியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய கரூர் ராமேஸ்வரப்பட்டி வீடு, அவரது முன்னாள் உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகள், மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளின்போது, வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியான கார்த்திக் தலைமையில் ‘கரூர் கேங்’ என்ற குழு செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களின் உரிமங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தங்களுக்கு சாதகமானவர்களுக்கு டெண்டர்களை பெற்றுத் தந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள புதிய வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக்கில் போலி பில்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் நேரில் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ மிரட்டவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்சிக்கு இழுக்க முயன்றதாக எழுந்த புகார் தொடர்பான மற்றொரு வழக்கிலும் செந்தில் பாலாஜி சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் ஒருபுறம் அந்த வழக்கு தொடர்பான நடைமுறைகளும், மறுபுறம் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையும் என அவர் தொடர்ந்து சட்டச் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக உள்ளார். அப்போது பார் உரிமங்கள், மதுபான கொள்முதல், போக்குவரத்து டெண்டர்கள் மற்றும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது விசாரணையில் உள்ளவை என்பதும், அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
