தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது பயனாளிகளுக்கு மாதம் ரூ. 1,000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து நிதி நிலைமை மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி எப்போது முதல் கணக்கில் வரவு வைப்பது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை அல்லது பட்ஜெட் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அரசு தரப்பில் பயனாளிகளுக்கான புதிய தகுதி வரம்புகள் அல்லது அமலாக்க தேதி தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே இதன் முழு விவரங்கள் தெரியவரும்.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது, ”பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார். அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ”ஒருசில இடங்களில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கியுள்ளோம்’ என்றார்.
அதற்கு ”முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ”தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்?; தவெகவுக்கு வாக்களித்தால் மகளிர் உரிமைத்தொகை உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.10,000 கிடைக்கும் என மக்கள் ஓட்டுபோட்டனர்” என – முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனக் கூறினார்.
”மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை. தேர்தல் நேரத்தில் தான் தந்தது. 100 நாட்கள்தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம்” அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
