https://republictn.com/

இந்திய குடியுரிமை பெறுவதற்கான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமை விதிகளில் திருத்தம் செய்து, மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களது தாய்நாட்டு பாஸ்போர்ட் தொடர்பான முழுமையான விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களிடம் தற்போது செல்லுபடியாக உள்ளதா அல்லது காலாவதியானதா என்பதை பொருட்படுத்தாமல், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது வங்கதேச பாஸ்போர்ட் உள்ளதா என்பதை உறுதிமொழி பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை அந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண், வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம் மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் தரவு சரிபார்ப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரரின் குடியுரிமை விண்ணப்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், அவர்கள் தங்களது பழைய நாட்டு பாஸ்போர்ட்டை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும்.

குடியுரிமை அங்கீகாரம் கிடைத்த 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தபால் நிலைய கண்காணிப்பாளரிடம் செல்லுபடியாக உள்ள அல்லது காலாவதியான பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே குடியுரிமை நடைமுறைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும், 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கீழ் வருபவர்களுக்கு பொருந்தும்.

அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்து, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் முக்கிய வழிகாட்டுதலாக அமையும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago