இந்தியாவின் முன்னணி வங்கிகளான State Bank of India (SBI), HDFC Bank அல்லது ICICI Bank போன்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களா நீங்கள்? ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்குச் மாறுவது இதுவரை பலருக்கும் மிகப்பெரிய சிரமமாகவே இருந்து வந்தது.
பழைய கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த மாத தவணைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், தானியங்கி பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை புதிய கணக்கிற்கு மாற்ற பல படிவங்களை நிரப்பி, வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இனி அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Reserve Bank of India வெளியிட்டுள்ள “Payments Vision 2028” திட்டத்தின் கீழ் “PaSS (Payments Switching Service) எனப்படும் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. எளிமையாகச் சொல்வதானால், ஒரு மொபைல் நெட்வொர்க்கிலிருந்து மற்றொன்றுக்கு எண் மாற்றமின்றி மாறும் ‘மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி’ வசதியைப் போல, இனி வங்கி கணக்கையும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த புதிய PAAS திட்டத்தின் மூலம், உங்கள் பழைய வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணப் பரிவர்த்தனை விவரங்களையும் எந்த சிரமமும் இன்றி புதிய வங்கி கணக்கிற்கு தானாக மாற்றிக்கொள்ளலாம். இதில் முழுமையான மாற்றம் மற்றும் தேவையான சேவைகளை மட்டும் மாற்றிக்கொள்ளும் பகுதி மாற்றம் என இரண்டு வசதிகளும் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம், ஒவ்வொரு முறையும் புதிய படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குறிப்பாக வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் சூழலில் ஏற்படும் குழப்பங்களுக்கும் இது தீர்வாக அமையும்.
மேலும், மாத தவணைகள் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் சிபில் ஸ்கோர் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த திட்டம் நிரந்தர தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு சிறந்த வட்டி விகிதம் மற்றும் தரமான சேவை கிடைக்கிறதோ, அங்கு வாடிக்கையாளர்கள் எந்த தடையும் இன்றி தங்களுக்கு விருப்பமான வங்கிக்குச் செல்ல முடியும். இது வங்கிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டியையும் உருவாக்கும்.
இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் தங்களே தற்காலிகமாக “ஆன்” அல்லது “ஆஃப்” செய்து கொள்ளும் புதிய வசதியும் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் தேவையற்ற நேரங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடக்கி வைத்து மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அதேபோல், ஒருவேளை ஆன்லைன் மோசடி ஏற்பட்டால், பணம் அனுப்பிய வங்கியும் மோசடி நபர் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டிய புதிய விதியும் அமலுக்கு வர உள்ளது.
மொத்தத்தில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய மாற்றங்கள், பொதுமக்களின் வங்கி பயன்பாட்டை மேலும் எளிமையாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
