தேர்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்கள் தங்களது உரிமம் பெற்ற வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளை காவல் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் ஒப்படைத்திருந்தனர். கணினி மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்காக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த மோனுவுக்கு, ஆயுதக் கிடங்கிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய மோனு, 2025ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரை, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிறுகச் சிறுக மொத்தம் 32 துப்பாக்கிகளை திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் ஆயுதக் கிடங்கை வழக்கமான பராமரிப்பு ஆய்வுக்காக ஆய்வு செய்த காவல் நிலைய மேலாளர் ராம்பீர் சிங், பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்கும் ஆயுதங்களின் உண்மையான எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து தொடங்கப்பட்ட தீவிர விசாரணையில், மோனுவே இந்தத் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.
விசாரணையில், திருடப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளை அரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்கு மோனு சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அரியானா குற்றப்பிரிவு போலீசார் மோனுவைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கிகளை வாங்கியதாகக் கூறப்படும் கூட்டாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் கடமையில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, ஆயுதக் கிடங்கின் பொறுப்பாளராக இருந்த உதவி ஆய்வாளர் (ASI) பிஜேந்தர் சிங் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், திருடப்பட்ட 32 துப்பாக்கிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த ஆயுதங்களே திருடப்பட்ட இந்தச் சம்பவம், அரியானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
