சென்னையில் திருமண மண்டபங்களுக்கான மதுபான சிறப்புரிமைக் கட்டணத்தை 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்து, புதிய கட்டண விவரங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக ரூ.10,000 ஆகவும், உரிமக் கட்டணம் ரூ.30,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆண்டு சிறப்புரிமைக் கட்டணம் பகுதிவாரியாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் திருமண மண்டபங்களுக்கான ஆண்டு சிறப்புரிமைக் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் ஆண்டு சிறப்புரிமைக் கட்டணம் ரூ.25 லட்சமாகவும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் ரூ.20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிப் பகுதிகளில் இந்தக் கட்டணம் ரூ.15 லட்சமாகவும், பிற அனைத்து பகுதிகளிலும் ரூ.10 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண அமைப்பு தொடர்பான திருத்தங்களை தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
