https://republictn.com/

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, 2026 ஜூன் 28ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசி அட்டவணையின்படி ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், இந்த முகாமில் வழங்கப்படும் கூடுதல் டோஸை தவறாமல் வழங்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அண்டை நாடுகளில் போலியோ பாதிப்புகள் இன்னும் தொடர்வதால், இந்தியக் குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கி, நாட்டை தொடர்ந்து போலியோ இல்லாத தேசமாக பராமரிப்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஜூன் 28ஆம் தேதி முகாம் மையங்களுக்கு வர இயலாத அல்லது சொட்டு மருந்து பெற தவறவிடப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு தேடி சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.

மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம், அடுத்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தை தவறாமல் வழங்கி, நாட்டை தொடர்ந்து போலியோ இல்லாத தேசமாக பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago