குளித்தலை அருகே கோவில் அன்னதானத்திற்கு இஸ்லாமியர் சமையல் குழுவினரை வைத்து கிராம இளைஞர்கள் மேற்கொண்ட மத நல்லிணக்க அன்னதானம் கவனம் பெற்றுள்ளது
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், எரமநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் -மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
50 வீடுகள் கொண்ட இந்த சிறிய கிராமத்தில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஶ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு இஸ்லாமிய சமையல் கலைஞர்களைக் கொண்டு அன்னதானத்தை ஏற்பாடு செய்தனர்.
இஸ்லாமிய சமையல் கலைஞர்கள் சமைத்த அன்னதான உணவை அம்மனுக்கு படையிலிட்டு சிறப்பு பூஜை செய்து 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கினர். அன்னதான உணவை சமைப்பதற்கு முன்பாக வேற்றுமையின்றி கோவிலுக்கு முன்பே துவா செய்து சமையலை தொடங்கினார் இஸ்லாமியர்.
தமிழ்நாடு மதநல்லிணக்கத்திற்கு பேர் போன நாடு என்பதை காட்டும் விதமாக எரமநாயக்கன்பட்டி இளைஞர்கள் தொடர்ந்து மூன்றாம் ஆண்டு மேற்கொள்ளும் மத நல்லிணக்க அன்னதானம் கவனம் பெற்றதோடு சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
