பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத கட்டாய நடைமுறை அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள தாகூர் பப்ளிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி சுகைனா ரிஸ்வி, பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தனது தாயார் மூலம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜீத் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் மாற்ற முடியாத அல்லது இன்றியமையாத பகுதி என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான மத ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. குர்ஆன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத நூல்களின் வலுவான ஆதாரங்கள் இல்லாமல், வெறும் கோரிக்கையை மட்டும் ஏற்க முடியாது என்றும் கூறியது.
கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தையும், நிறுவனத்தின் அடையாளத்தையும் நிலைநாட்டும் வகையில் சீருடை விதிமுறைகளை அமல்படுத்த பள்ளி நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தனிநபரின் விருப்பத்தைவிட கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்த நலன், ஒழுக்கம் மற்றும் சீருடை விதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அந்த மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தாலும், அதைத் தொடர்ந்து அணிவதற்கு நிரந்தரமான சட்ட உரிமை இருப்பதாகக் கோர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணிவதை அனுமதித்தது, சட்டபூர்வ உரிமையை உருவாக்காது என்றும், அது நிர்வாகத்தின் சோம்பேறித்தனம், அலட்சியம் அல்லது தயக்கமாக இருந்திருக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், அதே பள்ளியில் படிக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த பிற மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பள்ளி சீருடையுடன் மட்டுமே வருவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஹிஜாப் அணியாததால் ஒருவரின் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் அல்லது மதம் ஆபத்துக்குள்ளாகும் என்று கூற முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே பொருந்தும் என்றும், பள்ளிக்கு வெளியே மாணவிகள் தங்கள் விருப்பப்படி ஆடை அணிவதற்கு சுதந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி, அரசின் நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தங்களது வளாகத்திற்குள் சீருடை விதிமுறைகளை அமல்படுத்தவும், ஒழுங்குமுறையை நிலைநாட்டவும் அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் மாணவி தரப்புக்கு எதிராக பள்ளி நிர்வாகம் மட்டுமின்றி, உத்தரப் பிரதேச அரசு மற்றும் சிபிஎஸ்இ வாரியமும் வாதங்களை முன்வைத்தன. இதற்கிடையே, இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஹிஜாப் அணிவது தொடர்பான உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 25ஆவது பிரிவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறி விமர்சித்துள்ளார்.
மறுபுறம், கல்வி நிறுவனங்களின் ஒழுங்குமுறையை நிலைநாட்டும் விஷயத்தில் பள்ளி விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும் என பாஜக தரப்பில் சையத் ஜாபர் இஸ்லாம் உள்ளிட்ட தலைவர்கள் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, 2022ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஹிஜாப் வழக்குத் தீர்ப்புடன் தொடர்புடைய சட்டக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தது. இதனால், இந்த விவகாரம் தொடர்பான சட்ட நிலைமை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வின் இறுதிப் பரிசீலனைக்கு உட்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சுகைனா ரிஸ்வி தனது பழைய அடையாள அட்டை மற்றும் பள்ளியில் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படம் உள்ளிட்டவற்றை, கடந்த காலங்களில் ஹிஜாப் அணிந்து பள்ளியில் படித்ததற்கான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், முந்தைய அனுமதியை நிரந்தர சட்ட உரிமையாகக் கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான விவகாரம் மீண்டும் தேசிய அளவில் சட்ட மற்றும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
