பள்ளி மாணவர்களுக்குச் சீருடை, தலைமுடி போன்ற விஷயங்களில் சில விதிமுறைகள் உள்ளன.மாணவர்கள் அதிக முடி வளர்த்தாலோ அல்லது சினிமா பாணியில் (ஸ்டைலாக) வெட்டி வந்தாலோ ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்.தலைமுடியை வெட்டி வருமாறு பலமுறை கூறியும் மாணவர்கள் கேட்காதபோது ஆசிரியர்களே முடி வெட்டி விடுவதுண்டு. அப்படி ஒரு சம்பவமாக நாட்றம்பள்ளியில் அரங்கேறி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் ஒழுக்கமாக முடி திருத்தம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் என அவ்வபோது அப்பள்ளியின் “உடற்கல்வி ஆசிரியர் பழனி” அறிவுறுத்தி வந்திருக்கிறார்.
அதில் சில மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் “பங் கட்டிங்” கலர் கட்டிங்’ என விதவிதமா முடி திருத்தம் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு முடி திருத்தும் தொழிலாளர்களை பள்ளி வளாகத்திற்கே அழைத்து வந்து, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடியை ஒட்ட நறுக்கியபடி வெட்ட வைத்து ஒழுங்குப்படுத்தினார்.
இதுசம்பந்தமாக உடற்கல்வி ஆசிரியர் பழனி கூறுகையில் ;- மாணவர்கள் எப்போதும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும் கல்வியைவிட ஒழுக்கம் மிக முக்கியம் எனவும் தெரிவித்தார். ஒழுக்கத்துடன் ஒவ்வொரு மாணவரும் இருந்தால் அடுத்த தலைமுறை நிச்சயம் குற்றங்கள் நடைபெறாத தலைமுறையாக இருக்கும் எனவே ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள் படிப்பு தானாக வரும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

மாணவர்கள் சிலர், போதைப் பொருள்களுக்கு அடிமையாகி முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை, பல வண்ணங்களில் தலைக்கு நடுவிலும் காதோரங்களில் முடி சாயம் பூசி தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளும் இதுபோன்ற மாணவர்கள் ஆசிரியர்களுக்குக் கட்டுப்படுவதில்லை, பெற்றோரிடம் வரம்பு மீறிச் செயல்படுகிறார்கள் என்ற புகார்கள் வந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியிலும், ஊர் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
