தமிழக சட்டசபை கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் அன்னபூர்ணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சி.எம்.விஜய் உரையாற்றியதாவது: கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும், பொதுமக்கள் தங்களது வருவாயிலிருந்து கூடுதலான தொகையை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையை அவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், முதல் கட்டமாக “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டப் பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பட்டியல் பெற்று, சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தினால் சுமார் ஒரு கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது, ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாயக் குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகையான ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
