கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு புதிய ஆடை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய இளைஞர், அந்த சிறுமியை காரில் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை அவரது வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் அழுது கொண்ட பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருவீட்டார் கலந்து பேசி அந்த இளைஞருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்து கொண்ட இளைஞரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் அந்த இளைஞர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் தான் செய்தது குற்றம் இல்லை, இரு வீட்டார் ஒப்புதலுடன்தான் சிறுமியை திருமணம் செய்து கொண்டேன். எனவே என் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் தனிநபர் சட்டத்தை விட போக்சோ சட்டத்திற்கு தான் முன்னுரிமை கூடுதலாக இருக்கிறது. சிறுமியை திருமணம் செய்து பாலியல் அத்துமீறல் செய்த போது அவருக்கு வயது 17 ஆண்டு ஒரு மாதம்தான் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் குற்றம் செய்துள்ளார். அத்துடன் சிறுமியின் பெற்றோரும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் மகளுக்கு நடந்த கொடூரத்தை பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. முஸ்லீமாக இருந்தாலும் சிறுமிக்கு 18 வயதுக்கு கீழே உள்ள போது தனிநபர் சட்டங்கள் வழக்கில் செல்லுபடியாகாது. போக்சோ வழக்கில் இருந்து இளைஞரை விடுவிக்க முடியாது என கூறி அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் மனைவியாக இருந்தாலும் 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது தவறு என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
