தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தவெக கட்சி பெண் இணைச்செயலாளர் உள்ளிட்டோர் ஆபாச பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த விஸ்வநாதன்?
காஞ்சிபுரத்தை சேர்ந்த பெ.விஸ்வநாதன் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் சார்பில் மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டார். இதனால், மேலூர் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பமே வெடித்தது. ”பட்டியலின வேட்பாளர் எப்படி பொது தொகுதியில் வெற்றி பெற முடியும்? அதுவும் அ.தி.மு.க கோட்டையில் தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வெற்றி பெற வைக்க முடியாது” என கட்சியினர் போர்கொடி தூக்கியதோடு வேட்புமனுதாக்கல் செய்ய கூடாது என விஸ்வநாதனுக்கும் அழுத்தமும் கொடுத்தனர்.

டெல்லி தலைமை தலையிட்டு சரிகட்டவே, ஓய்ந்தது உட்கட்சி சண்டை. தேர்தல் பிரச்சாரத்தில் ”கக்கனுக்கு அடுத்து நான்தான் இங்கு போட்டி இடுகிறேன்” என பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது திமுக. இதனால் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு அடுத்த படியாக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் மேலூர் தொகுதியில் போட்டியிடுவதால் அந்த சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே விழுந்தன.
கூட்டணி கட்சியினர் தி.மு.க-வினரும் பட்டியலினத்தவரல்லாத சமூகங்களிடம் பேசி ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் திருப்பவே, அ.தி.மு.க கோட்டையை உடைத்து வெற்றி கொடி நாட்டியது காங்கிரஸ், பொது தொகுதியில் வென்ற பட்டியலினத்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டார் விஸ்வநாதன்.
இந்த நிலையில் தேர்தல் ரிசல்ட்க்கு பிறகு யாரும் எதிர்பாராத வகையில் தவெக வெற்றி பெற்று மைனாரிட்டி அரசாக அமைத்த நடிகர் விஜய்க்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு தாவி “கை” கொடுத்தனர்.

அதற்காக காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதில், மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதனுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
தான் வெற்றி பெற்ற முதல் தேர்தலிலேயே பள்ளிக்கல்வி, உயர் கல்வி துறை என இரண்டு அமைச்சர் பொறுப்புகளிலும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்து தாங்களும் சமூக நீதி அரசு தான் என தமிழக வெற்றிக் கழகமும் பெருமைப்பட்டுக் கொண்டது
ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர்! இந்த நிலையில், தன் சொந்த தொகுதிக்கு சென்ற அமைச்சர் விஸ்வநாதன் நாளை விஜய்யின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து கொண்டு தன் கைத்தடிகளோடு மேடை ஏறிய அமைச்சர் விஸ்வநாதன் உடன் மேலூர் நகர தவெக இனை செயலாளர் சுபாஷிணி மேடை ஏறினர்.
முன்னதாக கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட பாடலுக்கு நடனமாட காத்து இருந்தாற்போல் அப்போது விஜய் படத்தில் இடம் பெற்ற “ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி… ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி தௌசண்ட் வாட்ஸ்சு பல்பு போல கண்ணு கூசுதேடி…” என்ற ஆபாச அர்த்தத்தில் ஒலித்த பாடல் வரிக்கு விஸ்வநாதனும், சுபாஷிணியும் “வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டார்கள்” . இதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
பொதுமக்களும் முகசுழித்தவாறு அங்கிருந்து புறப்பட்டனர். “ஆபாச பாடலுக்கு அமைச்சர் ஆட்டம் போட்ட சம்பவம்” வீடியோவாக வெளியாகி டெல்லி காங்கிரஸ் தலைமை வரை சென்று அதிர வைத்திருக்கிறது.
மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள அமைச்சர் ரீல்ஸ் மோகத்தில் அவர்களை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
