தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் எழுப்பிய “அப்பாவை காணோம்” என்ற குட்டிக்கதை விமர்சனத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகுந்த பதிலடி அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜயும் திமுக உறுப்பினர்களும் இடையே கடுமையான அரசியல் விவாதங்களும் வார்த்தை மோதல்களும் அரங்கேறின.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் “அப்பாவை காணோம்” என்ற குட்டிக்கதையை சைகைகளுடன் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்து அவையில் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், தனது உரையை முடித்த பின்னர், மு.க.ஸ்டாலின் முன்பு செய்திருந்த ஒரு வைரலான கைசைகையை விஜய் அவையிலேயே செய்து காட்டியதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “என்னை அங்கே (சட்டமன்றத்தில்) தேடாதீர்கள். நான் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, “தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்பட்டு வரும் வரை, இந்த ஸ்டாலின்தான் மக்களின் முதலமைச்சர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரை முதலமைச்சர் விஜய் ஒரு நாடக மேடையாகவும், சினிமா படப்பிடிப்புத் தளமாகவும் பயன்படுத்தி, அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறுகளைப் பரப்புவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயின் இந்த விமர்சனத்திற்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சட்டமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை திமுக தொண்டர்களிடையே வலுத்து வருகிறது.
இதனிடையே, தற்போது தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக திமுகவின் மூத்த தலைவர்கள் ஊடகங்களிடம் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், எதிர்வரும் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
