தவெக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னமும் எப்படியாவது குதிரை பேரத்தின் மூலமாக யாரையாவது விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்துவிடலாம் என்று இன்று காலை வரை, இந்த நொடி வரை முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். பல லட்சம் கோடி, பல ஆயிரம் கோடி பணத்தை வைத்திருக்கும் இருவரும் சேர்ந்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் மீது இருக்கும் பல வழக்குகளுக்குப் பயந்தும்தான் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் எனக்கு போன் பண்ணி கேட்டார்
தொடர்ந்து பேசிய அவர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் நிலைப்பாடு குறித்துப் பேசுகையில் ஒரு ரகசியத்தை உடைத்தார். “வைகோ போன்ற மூத்த தலைவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லை. ஆனால், அவராலேயே இவர்களுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணமே, ஸ்டாலின் இன்றளவும் அ.தி.மு.க-வோடு சேர்ந்து, பாரதிய ஜனதாவின் மறைமுகப் பாதுகாப்போடு தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதுதான்.
இதற்கு முன், ஸ்டாலின் எனக்குத் தனிப்பட்ட முறையில் போன் செய்து, ‘நாங்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றார். இதை யாராவது எதிர்பார்த்தீர்களா? மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் இவர்களோடு நேர்மையாக அரசியல் செய்ய விரும்பும் யாரும் பயணிக்க மாட்டார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே வைகோ போன்றவர்களின் எம்பி பதவிகளை வைத்து பேரம் பேசப்பட்டது. இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்… மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தங்களின் மொத்தக் கட்சியையும் பா.ஜ.க-வோடு இணைத்துவிட்டு, ஆளுக்கு ஒரு கேபினெட் மந்திரி சீட்டை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். வடமாநிலங்களில் பல பாரம்பரியமிக்க கட்சிகள் தங்களின் குடும்பப் பாதுகாப்பிற்காக இப்படிச் செய்த முன்உதாரணங்கள் உள்ளன. அதேபோல தமிழ்நாட்டிலும் கட்சியை நடத்த முடியாமல், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் பா.ஜ.க-விடம் சரணடையும் காலம் தூரத்தில் இல்லை” என்று கூறி அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
