தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி தனியார் சொகுசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து அதிகாலை 4 மணியளவில் கொடட் மண்டல் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
