மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, பழனியை சேர்ந்த உத்தப்பணி என்பவரின் மகன் கண்ணன், தவெக பிரமுகராக அறியப்படுபவரும், பெயிண்டராகவும் பணியாற்றி வருபவர் ஆவார். இவர் நேற்று நள்ளிரவில் கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் எழுந்து வந்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த கண்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கண்ணனை கைது செய்துள்ளனர்.
இதே பகுதியில் சமீபத்தில் குழந்தை தொடர்பான கொடூர சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
