திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் இங்கு இருக்க கூடிய மலைச்சாலைகள் மற்றும் முக்கிய நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று QR கோடு மூலம் கட்டணம் செலுத்தி சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இருப்பதால் இந்த பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து இருக்கின்றன.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெருசலாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் பெரும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தூண்பாறை , மோயர் சதுக்கம் , பைன் மரக்காடுகள், குணா குகை ஆகிய பகுதிகளுக்கு சென்று வர கட்டணம் தேவை இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று வரலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் தற்பொழுது மகிழ்ச்சியடைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது…
