தமிழக பாஜக-வுக்குள் அடுத்த சில மாதங்களில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் அரங்கேறப் போவதை உணர்த்தும் வகையில், டெல்லி தலைமை, தமிழகத் தலைவர்களுக்கு 3 மாதக் கெடு விதித்துள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவர் நைனார் நாகேந்திரனின் பதவியும் கூட தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தடதடக்கின்றன.
டெல்லியில் நடந்த ரகசியக் கூட்டம்
டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக-விற்கான மையக்குழு கூட்டம் சத்தமே இல்லாமல் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்க, தமிழகத் தரப்பில் இருந்து நைனார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணாமலைக்காகக் குரலை உயர்த்திய அமித்ஷா
கூட்டத்தின் துவக்கத்திலேயே, தமிழகத் தலைவர்கள் சிலர் அண்ணாமலைக்கு எதிராகச் செயல்படுவது குறித்து அமித்ஷா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். “ஏன் எல்லாரும் அண்ணாமலையைப் பற்றி விமர்சித்துப் பேசுகிறீர்கள்? அவர் நேற்று வரை நம்மோடு இருந்தவர் தானே? அவரை விமர்சிப்பது நம்மையே நாமே விமர்சிப்பது போலாகாதா? கட்சியைப் பலப்படுத்தும் வேலையைப் பார்க்காமல், சக தலைவர்களை விமர்சிக்கும் அரசியலை எத்தனை நாளைக்குச் செய்வீர்கள்?” என அமித்ஷா குரலை உயர்த்திப் பேச, டெல்லி மேடையில் அமர்ந்திருந்த தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் கப்சிப்பாகி உறைந்து போயுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “அண்ணாமலைக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நம்மைப் போன்ற வலுவான கட்சித் கட்டமைப்பு அவருக்குக் கிடையாது. தனிமனிதனை விட எப்போதுமே கட்சி அமைப்புதான் பெரியது. எனவே, அண்ணாமலை தனது தனிப்பட்ட அரசியலைத் தாண்டி, கட்சியை வளர்க்கும் வேலையைப் பார்க்க வேண்டும்” என்று அண்ணாமலைக்கும் ஒருபுறம் எச்சரிக்கை கலந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
நயினாருக்குக்கு 3 மாதக் கெடு
குறிப்பாக, தமிழக பாஜக-வின் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனின் தற்போதைய செயல்பாடுகளில் டெல்லி தலைமைக்குச் சற்றும் திருப்தி இல்லையாம். இதனால், தமிழக பாஜக-வை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் ஆக்கப்பூர்வமான, வலுவான எதிர்க்கட்சியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றும், மக்களிடையே கட்சிக்கு நல்லதொரு இமேஜை உருவாக்க வேண்டும் என்றும் டெல்லி தலைமை மிகக் கடுமையான கெடுவை விதித்துள்ளது.
டெல்லி தலைமையின் இந்த அதிரடி டோஸிற்குப் பிறகுதான், தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசுக்கு எதிரான அடுத்தடுத்த தொடர் போராட்டங்களை நோக்கித் தமிழக பாஜக தற்போது அவசர அவசரமாகக் களம் காணத் தொடங்கியுள்ளது” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
