தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பேசிய உருக்கமான வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களது உயிரையோ, பாதுகாப்பையோ பணயம் வைக்கக் கூடாது என்று அவர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ் அசோசியேஷன் (AAFA) ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜுன், தம்மீது ரசிகர்கள் காட்டும் அளவற்ற அன்புக்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், எந்தவொரு திரைப்பட வெளியீடு, பொதுநிகழ்ச்சி அல்லது ரசிகர் சந்திப்பு என்றாலும், கூட்ட நெரிசலில் முண்டியடித்து உயிரைப் பணயம் வைக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“உங்களுடைய உயிர் எனக்கு மிகவும் முக்கியம். என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக உங்கள் பாதுகாப்பை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி” என்ற அவரது வேண்டுகோள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 2024-ஆம் ஆண்டு, ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றபோது, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரசிகை ரேவதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி வழங்கியதுடன், இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு ரசிகர் மன்ற மாநாட்டிலும் அதையே மீண்டும் வலியுறுத்திய அவர், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநில அளவிலான ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கு ₹3 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜுன், “2006 முதல் எனது ரசிகர்கள் பல்வேறு சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக பலரும் கூறியுள்ளனர். அதைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டு காலத்தைத் தாண்டியும், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது. இந்தக் கூட்டு சக்தியை இன்னும் பயனுள்ள வழியில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தூண்டியது” என்றார்.

இதனுடன், சமூக வலைதளங்களில் நடைபெறும் ‘Fan Wars’, ட்ரோலிங் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்தும் அல்லு அர்ஜுன் முக்கிய அறிவுரை வழங்கினார்.
“ஒவ்வொரு நாளும் நாம் முழு ஆற்றலுடன்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். அந்த ஆற்றலை எதில் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுங்கள். பிடிக்காத விஷயங்களை விமர்சிப்பதிலும், ட்ரோல் செய்வதிலும் அல்லது வெறுப்பைப் பரப்புவதிலும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
மேலும், “உங்களிடம் பணம் இருந்தால் தேவையில்லாத பொருளுக்காக அதைச் செலவிட மாட்டீர்கள். அதுபோலவே, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராத விஷயங்களுக்காக உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம்” என்றும் அறிவுறுத்தினார்.
அதே உரையில், சமூக வலைதளங்களில் மற்றவர்களை ட்ரோல் செய்வதற்குப் பதிலாக, “அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த பெண்ணின் வீட்டு வாசலில் போய் நில்லுங்கள்; அதுவாவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தினாலும், சமூக வலைதளங்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களைப் பின்தொடர்வதை ஊக்குவிப்பது போன்ற தவறான புரிதலை இந்தக் கருத்து ஏற்படுத்தக் கூடும் என்றும், ஒரு பொறுப்புள்ள முன்னணி நடிகர் இதுபோன்ற உதாரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
மறுபுறம், அல்லு அர்ஜுனின் கருத்து முழுமையாக நகைச்சுவை நோக்கத்திலேயே கூறப்பட்டது என்றும், அதன் மையச் செய்தி வெறுப்பைத் தவிர்த்து, நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என்றும் அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், 2024 டிசம்பரில் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாக (A11) சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக அவர் அண்மையில் மும்பையில் இருந்து காணொளிக் காட்சி (Video Conference) வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ள அல்லு அர்ஜுனின் இந்த நடவடிக்கை, தெலுங்கு திரையுலகில் ஒரு புதிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், அவரது உரையில் இடம்பெற்ற சில நகைச்சுவை கருத்துகள் சமூக வலைதளங்களில் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
