கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில், தனியார் நிறுவனத்தின் பின்புறம் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயில் எரிந்து கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த நபர்களைப் பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மேற்பார்வையில், பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் கோவில்பாளையம், வடசித்தூர், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில், ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி அந்தப் பகுதிக்குள் வந்து செல்லும் காட்சிகளும், அதே நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் மற்றும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சி பதிவெண் கொண்டது என்பதும், அதில் இரண்டு பேர் வந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், அங்குள்ள மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பழனிமுத்துவைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணை எரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதனையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான தகவலின்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த குருநாதன், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் குடியேறியுள்ளார். அவரது மகன் பழனிமுத்துவும், அவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது, அதே கடையில் பணியாற்றிய பெண்ணை பழனிமுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 13 வயது மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அதே ஜவுளிக்கடையில் பணியாற்றிய, திருமணமான பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவுடன் பழனிமுத்து நெருங்கிப் பழகியுள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பழனிமுத்துவும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அதே சமயம், சங்கீதாவுடனான நெருக்கத்தை பழனிமுத்து மேலும் அதிகரித்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா தனது குடும்பத்தைப் பிரிந்து, பழனிமுத்துவுடன் சேர்ந்து கிணத்துக்கடவு காமராஜர் நகரில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
நாளடைவில், குடும்பம் நடத்த பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் இரவு பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், உல்லாசமாக இருந்தால் பிரச்சினை சரியாகிவிடும் என்று பழனிமுத்து சங்கீதாவை அழைத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பழனிமுத்து, கத்தியை எடுத்து சங்கீதாவைக் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கொலையை மறைக்கும் நோக்கில் தனது தந்தை குருநாதனுக்கு பழனிமுத்து தகவல் தெரிவித்துள்ளார். உடனே பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு வந்த குருநாதன், தனது மகன் பழனிமுத்துவுடன் சேர்ந்து சங்கீதாவின் உடலை சாக்குப் பையில் வைத்து கட்டி, இருசக்கர வாகனத்தில் ஏற்றி, பழனிமுத்து பணிபுரிந்த தொழிற்சாலைக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் குருநாதன் பெட்ரோல் வாங்கி வந்து, சங்கீதாவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சங்கீதாவைக் கொலை செய்த பழனிமுத்துவையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதனையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
