ஒடிசா மாநிலத்தின் 5-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த பிரபல இந்தித் திரைப்படப் பாடலின் வரிகள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1999-ஆம் ஆண்டு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ (Hum Dil De Chuke Sanam) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நிம்பூடா நிம்பூடா’ (Nimbooda Nimbooda) பாடலின் வரிகளே 5-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நடிகர்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் நடித்த இந்தப் பாடல், ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடலைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும்.
ராஜஸ்தானி நாட்டுப்புறக் கலை குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக பாடம் தயாரிக்கப்பட்டபோது, திரைப்படப் பாடலின் வரிகள் தவறுதலாகப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஒடிசாவின் சொந்தக் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற மரபுகளைப் புறக்கணித்து, பாலிவுட் திரைப்படப் பாடலுக்கு பாடப்புத்தகத்தில் இடம் அளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் கல்வி அமைச்சர் நித்யானந்த கோண்ட் ஆகியோர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், புதிய பாடப்புத்தகங்கள் முழுமையாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற பிழைகள் ஏற்படாத வகையில் ‘தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு’ (Quality Assurance Cell) ஒன்றை அமைக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம், பாடப்புத்தகங்கள் தயாரிப்பில் தரக் கட்டுப்பாடு மற்றும் உள்ளடக்க சரிபார்ப்பின் அவசியம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
