மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் வாதவன் பகுதியில், ரூ.45,000 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் பிரமாண்ட கடல் விமான நிலையம் (Offshore Airport) அமைக்கப்படவுள்ளது. நிலப்பரப்பு பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், கடலில் செயற்கைத் தீவை உருவாக்கி இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரமாண்ட திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மகாராஷ்டிர அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானின் கான்சாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள கடல் விமான நிலையங்களைப் போல, கடலில் நிலத்தை மீட்டெடுத்து (Reclaimed Land) செயற்கைத் தீவு உருவாக்கி இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, ஆண்டுக்கு 90 மில்லியன், அதாவது சுமார் 9 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், ஆண்டுக்கு 30 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான சரக்கு மையமாகவும் (Air Cargo Hub) இது உருவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகளை திறம்பட இயக்குவதற்காக, இரண்டு அதிநவீன இணை ஓடுதளங்கள் (Two Parallel Runways) இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன.
அத்துடன், வரவிருக்கும் வாதவன் துறைமுகம், மும்பை–அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் மற்றும் உத்தன்–விரார் கடல் வழிச்சாலை (Uttan–Virar Sea Link) ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் இந்த விமான நிலையம் இணைக்கப்பட உள்ளது.
மும்பை விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் சாதனையாகவும் இந்தத் திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
