தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஒட்டுமொத்த ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக அமைச்சர்களுக்கான துணைச் செயலாளர்கள் மற்றும் சிறப்புத் தனி உதவியாளர்களை நியமித்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆனால், இந்த புதிய நியமனப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர் கடந்த கால ஆட்சிகளில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்ற விவகாரம் தற்போது தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசு வெளியிட்டுள்ள இந்த அதிகாரிகள் பட்டியலில் உள்ள பலர், கடந்த கால ஆட்சி மாற்றங்களின் போது ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர்களாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரண வளையத்தில் இருந்தவர்களாகவும் கூறப்படுகிறார்கள். இதனால், “புதிய அரசு ஏன் இவர்களுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நியமனங்களில் மிகவும் உற்றுநோக்கப்படும் விஷயம், மிக முக்கியத் துறையான மதுவிலக்கு துறையில் நியமிக்கப்பட்டுள்ள ‘வீரபத்தீரன்’ துணைச் செயலாளர் பற்றியது. இந்த அதிகாரி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்த எஸ்.பி.வேலுமணியின் துறையில் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது, இவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் இந்த ‘வீரபத்திரன் பெயர் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட ஒரு சர்ச்சை பின்னணி கொண்ட அதிகாரி பற்றிய விவரங்கள் புதிய அரசுக்குத் தெரியாமல் போனது எப்படி என்றும், அதுவும் மிக முக்கியத் துறையான மதுவிலக்கு துறையிலேயே இவரைக் கொண்டு வந்து அமர வைத்தது யார் பின்னணியில் இருக்கும் நபர் என்றும் கோட்டை வட்டாரத்தில் கேள்விகள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
