Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கார்டிலியா க்ரூஸஸ் (Cordelia Cruises) நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘எம்.வி. எம்பிரஸ்’ (M.V. Empress) சொகுசுக் கப்பல், 11 தளங்களுடன் சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

புதிய சொகுசுக் கப்பல் சுற்றுலா சீசனைத் தொடங்கும் வகையில், மொத்தம் 21 பயணங்களை மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தக் கப்பல் ஜூன் 20, 2026 அன்று சென்னை துறைமுகத்திற்கு வந்தது.

இந்தக் கப்பல் மூலம் ஒரே நாளில் மொத்தம் 3,600 பயணிகள் கையாளப்பட்டனர். கப்பலில் இருந்து 1,800 பயணிகள் சென்னையில் இறங்கிய நிலையில், புதிய பயணத்திற்காக மேலும் 1,800 பயணிகள் சென்னையிலிருந்து கப்பலில் ஏறினர்.

சென்னை துறைமுகத்திற்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணிகளுக்கு சந்தனத் திலகம் இட்டு, ரோஜா மலர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், பிரபல வீணைக் கலைஞர் நித்யாஸ்ரீ சீனிவாசன் மற்றும் அரசு இசைக் கல்லூரி கலைஞர்கள் குழுவினரின் நேரடி கர்நாடக இசை மற்றும் வீணைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயணிகள் அனைவரும் சென்னை துறைமுகத்தின் நவீனமயமாக்கப்பட்ட ‘வெஸ்ட் க்வே’ (West Quay – WQ-IV) சொகுசுக் கப்பல் பயணிகள் முனையம் வழியாகச் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

.4,103 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த முனையத்தில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், ஒருங்கிணைந்த சுங்க மற்றும் குடியேற்றக் கவுண்ட்டர்கள், அதிநவீன லக்கேஜ் ஸ்கிரீனிங் வசதிகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முனையம் ஒரு மணி நேரத்திற்கு 800 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.

கார்டிலியா எம்பிரஸ் கப்பல், சென்னையிலிருந்து பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்கள் இதன் சர்வதேச பயண இடங்களாக உள்ளன.

மேலும், ஐந்து இரவுகள் மற்றும் ஆறு நாட்கள் கொண்ட உள்நாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ், சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி – சென்னை என்ற வழித்தடத்திலும் இந்தச் சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது.

கடலின் நடுவே நகரும் நவீன மினி-நகரம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 11 தள சொகுசுக் கப்பலில் உலகத் தரத்திலான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 796 அறைகளைக் கொண்ட இந்தக் கப்பலில், பட்ஜெட் அறைகள், கடல் காட்சியுடன் கூடிய ஜன்னல் அறைகள் மற்றும் தனி பால்கனியுடன் கூடிய ஆடம்பர சூட் அறைகள் இடம்பெற்றுள்ளன.

பயணிகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய மற்றும் ஆசிய உணவுகளை வழங்கும் 11-க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அன்லிமிடெட் பஃபே மற்றும் பிரத்தியேக ஜெயின் உணவு வசதிகளும் உள்ளன. மேலும், சர்வதேச தரத்திலான பானங்களை வழங்கும் ஐந்து நவீன பார்களும் இடம்பெற்றுள்ளன.

பொழுதுபோக்கிற்காக பாலிவுட் நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேஜிக் ஷோக்கள் நடைபெறும் பிரம்மாண்ட ‘மார்கியூ தியேட்டர்’, லாஸ் வேகாஸ் பாணியிலான அதிநவீன கேசினோ, திறந்தவெளி நீச்சல் குளங்கள், ஜாகுசி தொட்டிகள் மற்றும் நேரடி டிஜே இசையுடன் கூடிய பூல் பார்ட்டிகள் ஆகியவை பயணிகளைக் கவர்கின்றன.

சாகசத்தை விரும்புவோருக்காக கப்பலின் மேல் தளத்தில் ராக் கிளைம்பிங் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. உடல்நலத்தைப் பேணுவதற்காக கடல் காட்சியை ரசித்தபடி உடற்பயிற்சி செய்யும் அதிநவீன ஜிம், ஸ்பா மற்றும் சலூன் வசதிகளும் உள்ளன. குழந்தைகளுக்கென பாதுகாப்பான விளையாட்டு மற்றும் பராமரிப்பு வசதிகளுடன் ‘கார்டிலியா அகாடமி’ சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ‘எம்.வி. எம்பிரஸ்’ சொகுசுக் கப்பல், கடலின் நடுவே நகரும் ஒரு நவீன நகரத்தைப் போன்ற அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago