ஆந்திரப் பிரதேசத்தில் கடும் வெயில் மற்றும் வறட்சி நிலை நீடித்து வரும் நிலையில், நல்ல மழை பொழிய வேண்டி கிராம மக்கள் தவளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், கொத்தபேட்டா மண்டலத்திற்கு உட்பட்ட வாடபாலெம் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு பருவமழை இன்னும் தொடங்காததாலும், கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலை நிலவுவதாலும், விவசாயம் செழிக்கவும், போதுமான மழை பெய்யவும் வருண பகவானை வேண்டி கிராம மக்கள் இந்த பாரம்பரிய வழிபாட்டு முறையை மேற்கொண்டனர்.
இதற்காக இரண்டு தவளைகளைப் பிடித்து வந்து, அவற்றுக்கு மஞ்சள், குங்குமம் பூசி, மாலைகள் மற்றும் மலர்களால் அலங்கரித்தனர். பின்னர், வாடபாலெம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி பாலம் சந்திப்பு பகுதியில், வேத விற்பன்னர்கள் மற்றும் பூசாரிகள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க சாஸ்திரோபதேச முறையில் தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.
திருமண நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், அந்த தவளை ஜோடிகளை தாரை தப்பட்டை, மேளதாளங்கள், பேண்ட் வாத்தியங்கள் மற்றும் பட்டாசு வெடிப்புகளுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் உற்சாகமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்தியாவின் பல கிராமப்புற பகுதிகளில், தவளைகள் குரல் எழுப்பினால் மழை பெய்யும் என்ற பழங்கால இயற்கை சார்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது. அதேபோல், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் வருண தேவன் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக மழை பொழிவிப்பார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்து வருகிறது.
அதன் அடிப்படையிலேயே, மழை வேண்டி வாடபாலெம் கிராம மக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, மழை வளம் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்த வினோத நிகழ்வு அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
