தவெக கட்சி தலைவர் விஜய், வரவிருக்கும் உள்ளாட்சி, இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளப் புதிய அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில், தவெகவின் புதிய ‘கிங் மேக்கர்’ யார் என்ற விவாதம் தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு ஒரு முக்கிய நபர் காய் நகர்த்தி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள், கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்- ஆளுநரிடம் புகார்
அண்மையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அவரது நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டி மற்றும் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும், “அரசின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் வெளிநபர்கள் எப்படிப் பங்கேற்கலாம்?” என்ற கேள்வியோடு ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் வேளையில், தற்பொழுது விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமியின் தலையீடுகள் கட்சிக்கு கூடுதல் தலைவலியாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமியின் அரசியல் என்ட்ரி?
நெருக்கடிகள் ஒருபுறமிருந்தாலும், தவெகவின் தேர்தல் வியூக ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி, தற்பொழுது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தவெகவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக ‘துணைத்தலைவர்’ பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போதைய நிலையில் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரே முன்னிலையில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தனக்கு நம்பிக்கைக்குரியவராக விளங்கும் ஜான் ஆரோக்கியசாமிக்குக் கட்சியின் ‘துணைத்தலைவர்’ பதவியை வழங்கி, கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்த விஜய் விரும்புவதாகத் தகவல் கசிந்துள்ளது.

தீவிரமாகும் உட்கட்சிப் பூசல்
ஆனால், ஜான் ஆரோக்கியசாமி நேரடியாகக் கட்சிப் பொறுப்புக்கு வருவதை, ஆதவ் அர்ஜுனா தரப்பு முற்றிலும் ரசிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தவெகவிற்குள் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமியின் இந்த புதிய என்ட்ரி தவெக தலைமையிலேயே ஒரு மிகப்பெரிய ‘அதிகார மோதலை’ உருவாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமியைக் கட்சிக்குள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டுவரும் முடிவை விஜய் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் நகர்வு தவெகவிற்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
