கோழிக்கோடு: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பிரபல திருநங்கை மேக்கப் கலைஞரும், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஜான்மோனி தாஸை கேரளாவின் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதால், காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஜான்மோனி தாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவர் நவ்யா ஹரிதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

ஜான்மோனி தாஸ் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 192, 356(2) மற்றும் கேரள காவல் சட்டத்தின் பிரிவு 120(o) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுதல், அவதூறு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஜான்மோனி தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், மலையாள மொழியை சரளமாகப் பேசத் தெரியாததால் வார்த்தைகள் தவறாக வெளிவந்திருக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். எனினும், அவரது மன்னிப்பை பாஜக மகிளா மோர்ச்சா ஏற்கவில்லை.
தனது பேச்சு குறித்து விளக்கமளித்த ஜான்மோனி தாஸ், டெல்லி போராட்டத்தின்போது ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பதிலளித்ததாகக் கூறினார். பின்னர் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் பேசியது பெரிய சர்ச்சையாகிவிட்டதாகத் தெரிவித்தபோதுதான் அதன் தீவிரம் புரிந்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு இணையத்தில் தகவல்களைத் தேடிப் பார்த்தபோதுதான் தான் பேசிய தகவல்கள் தவறானவை என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்களை நம்பி, பிரதமர் மோடியின் தந்தை 1947-ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டதாகவும், மோடி 1950-ஆம் ஆண்டு பிறந்ததால் மூன்று ஆண்டுகள் கழித்து அவர் எவ்வாறு பிறந்திருக்க முடியும் என்றும் ஜான்மோனி தாஸ் பேசியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி 1989-ஆம் ஆண்டில்தான் உயிரிழந்தார்.
இதனிடையே, வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தனக்கு மிரட்டல் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்ததாக ஜான்மோனி தாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே மன்னிப்பு கோருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்மோனி தாஸ், கேரளாவில் பிரபலமான மேக்கப் கலைஞராக உள்ளார். மஞ்சு வாரியர், அமலா பால், நஸ்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றியுள்ளார். திருநங்கை என்ற அடையாளத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 14 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் அவர், முதலில் பரதநாட்டியக் கலைஞராகவும் பின்னர் மேக்கப் கலைஞராகவும் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜான்மோனி தாஸ் விவகாரம் கேரளாவில் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
