https://republictn.com/

தமிழக முதல்வர் விஜய் தனது முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார், கூடுதல் செயலாளராக ஜி.லட்சுமி பிரியா ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்ததற்கு, தலித் பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல், நிர்வாக முறைகேடு புகார்களில் சிக்கிய இவர்களை நியமித்தது, ஊழலுக்கு எதிரான விஜய்யின் உறுதிமொழியை கேள்விக்குறியாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தலித் பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் (அறிவுச் சமூகம்) உறுப்பினர் ஒருவர் முகநூல் மூலமாக தமிழக முதல்வர் விஜய்க்கு அளித்துள்ள புகார் கடிதத்தில், “ச.ஜோசப் விஜய்க்கு முதல் கண்டனம். விஜய் மற்றுமொரு திமுக ஆட்சியின் தொடர்ச்சியா? பதவியேற்பு விழாவில் ஊழலுக்கு எதிராக இருப்பேன் என்று சொல்லிவிட்டு, சில மணி நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை தமது செயலர்களாக நியமித்த ச.ஜோசப் விஜய் அவர்களைக் கண்டிக்கிறேன்! பி.செந்தில்குமார் ஐஏஎஸ், ஜி.லட்சுமி பிரியா ஐ.எ.எஸ் ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா? எனத் தெரியவில்லை.

திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக ஜி.லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டனர். சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது.

விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

https://www.facebook.com/profile.php?id=100056755337809

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.பி.செந்தில்குமார் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

சுகாதாரத் துறைச் செயலாளராக அவர் இருந்தபோது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குப் போக மீதமுள்ள இடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, தகுதிப் பட்டியலில் பின்வரிசையில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறி சில மாணவர் அமைப்புகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான போராட்டங்களின் போது, துறைச் செயலாளர் என்ற முறையில் அவர் எடுத்த சில முடிவுகள் போராட்டக்காரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு முறையாகக் கொண்டு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 month ago at 1 month ago