தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் கடந்த 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகளை தவெக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நியமனங்கள் தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகளிலும், லஞ்சப் புகார்களிலும் சிக்கி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காகவும் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரே பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல், நீதிமன்ற வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. தகுதி, சீனியாரிட்டி அடிப்படையில் இல்லாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு பதவிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்தான், கடந்த சில தினங்களாகப் பல மாவட்டங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

அரசாணை வெளியான பிறகும் ‘டீலிங்’?
அரசாணை வெளியாகிவிட்டதால் இந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிடப் பெரிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது. வெளியிடப்பட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள தகுதியான நபர்களைக் கூட, பின்வழியாகப் பணத்தை வாங்கிக்கொண்டு மாற்றுவதற்கான வேலைகள் திரைமறைவில் நடப்பதாகப் புதிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக – தவெக ட்விஸ்ட்
குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வெளியிடப்பட்ட நியமன ஆணையில் இடம்பெற்றிருந்த அரசு வழக்கறிஞர்களைத் தூக்கிவிட்டு, புதிய நபர்களை நியமிப்பதற்கான உள்ளடி வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதில் பெரும் கூத்து என்னவென்றால், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை திமுகவிற்காகக் களத்தில் கடுமையாக வேலை பார்த்த சிலர், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் தவெக நிர்வாகிகளுக்கு “கொடுக்க வேண்டியதைக் கச்சிதமாகக் கொடுத்து” ஏற்கனவே அரசாணையில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தங்களுக்கு அந்தப் போஸ்டிங்கைப் பெற காய்களை நகர்த்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தேர்தலில் எதிர்த்து வேலை பார்த்தவர்களுக்கே, பணப் பலன்களைப் பெற்றுக் கொண்டு தவெக நிர்வாகிகள் வாரி வழங்குவது உண்மையான கட்சி விசுவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு எழும் நெருக்கடி
நிர்வாகத்தில் தூய்மை, வெளிப்படைத்தன்மை என அதிரடி காட்டி வரும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு இந்த “வழக்கறிஞர்கள் நியமன ஊழல்” சென்றதா? அல்லது தவெக-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் முதல்வருக்குத் தெரியாமல் இந்த டீலிங்கில் ஈடுபடுகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அரசாணையை மாற்றத் துணியும் இந்த விவகாரம் தவெக அரசுக்கு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
