தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ராஜிநாமா செய்ததையடுத்து காலியாக உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தாம் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் “அரசியல் ஒரு சாக்கடை” என்று கூறி தனது அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தாயார், தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்த பிறகு, தனது முடிவுக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
விரைவில் தனது தாயாரின் முன்னிலையில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தாம் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இது தகுந்த நேரம் அல்ல. அதனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அர்த்தமில்லை. அரசியல் பயணத்தில் எந்தவித அவசரமும் காட்ட விரும்பவில்லை. பதவிக்காக அல்ல, மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வர விரும்புகிறேன்,” என்று ராகவா லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் லாரன்ஸ் போட்டியிடுவார் என்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது ராகவா லாரன்ஸ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, தனது தாயாரின் ஆசியுடன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவான அரசியல் பயணத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக செய்து வரும் மக்கள் சேவையை, அரசியலின் வாயிலாக இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
