நடிகர் சூர்யா, தனது புதிய திரைப்படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்காக துள்ளலான மாஸ் டான்ஸ் பாடலை சொந்தக் குரலில் பாடி, ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன் சார்’ என்ற சூப்பர் ஹிட் பாடலுக்குப் பிறகு, சுமார் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் சூர்யா பின்னணிப் பாடகராக குரல் கொடுத்துள்ளார்.
இந்தப் பாடல் திரையரங்குகளில் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் அதிரடி மாஸ் டான்ஸ் பாடலாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் பாடலின் வரிகளை நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் எழுதியுள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தக் குடும்பத் திரைப்படம், ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சூர்யாவின் முந்தைய திரைப்படமான ‘கருப்பு’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அவர் மீண்டும் பாடகராக களமிறங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா பாடியுள்ள இந்த மாஸ் பாடல், படத்தின் இரண்டாவது சிங்கிளாக வெளியாக உள்ளது. இருப்பினும், பாடலின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் பாடலை பாடகி சுபலக்ஷிணி பாடியுள்ளார். பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். நடிகை மமிதா பைஜுவின் துள்ளலான நடனத்துடன் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி இப்படத்தைத் தயாரிக்கிறார்.
‘வாத்தி’ (Sir) திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் இதுவாகும். இந்த வெற்றிக் கூட்டணியுடன் நடிகர் சூர்யாவும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
