https://republictn.com/

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரின் உடலை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி அரசே தகனம் செய்யும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காவல் மரணத்திற்கு நீதி கோரி அவரது குடும்பத்தினர் 100 நாட்களுக்கும் மேலாக உடலைப் பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியிருந்தது.

நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் குடும்பத்தினர் உடலைப் பெற்றுக்கொள்ளாததால், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து உடலை தகனம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் (RDO) முன்னிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து ஆகாஷின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஆகாஷ் டெலிசன் (26), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆவார். அவரது காவல் மரணம் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி, இரு நபர்களை ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் கோபியை மானாமதுரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது, ஆகாஷ் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றதால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறையினர் அவரது கண்களைக் கட்டி, இரும்புக் கம்பியால் தாக்கி கடுமையாக சித்திரவதை செய்ததாக ஆகாஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ், சிகிச்சை பலனின்றி மார்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தார்.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி, ஆகாஷின் உடலில் எலும்பு முறிவுகள், தசைநார் சேதங்கள், மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது பெற்றோர் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆகாஷின் உடல் மூன்று மாதங்களுக்கும் மேலாக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. உடலை ஜூன் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. எனினும், குடும்பத்தினர் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து, நீதியரசர் எல். விக்டோரியா கௌரி, உடலை மேலும் தாமதிக்காமல் உரிய மரியாதையுடன் அரசே இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்று ஜூன் 16-ஆம் தேதி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 17-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தத்தனேரி மயானத்தில் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஆய்வாளர் மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் உட்பட ஆறு காவல்துறையினர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, இந்த வழக்கு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அந்தஸ்திலான அதிகாரியால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆகாஷ் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழான பிரிவுகளும் வழக்கில் இணைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன், காவல்துறையினர் தனது கண்களைக் கட்டி இரும்புக் கம்பியால் தாக்கியதாக அளித்த வாக்குமூலம் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. மேலும், மானாமதுரை நீதிமன்ற நடுவர் எம். அப்சல் பாத்திமா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷை நேரில் சந்தித்து, அவரது காலில் இருந்த காயங்களைப் பார்வையிட்டு, அவர் தெரிவித்த சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விரிவாக பதிவு செய்திருந்தார். இந்த ஆவணங்கள் விசாரணையில் முக்கிய சாட்சியங்களாக கருதப்படுகின்றன.

சிபிசிஐடி அதிகாரிகள், ஆகாஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் மேலப்பசலை பாலம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது ஆறு காவல்துறையினர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே ஆகாஷின் குடும்பத்தினரின் முக்கிய மற்றும் தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையில், அரசால் உடல் தகனம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். காவல் மரணம் தொடர்பான இந்த வழக்கின் இறுதி உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து சிபிசிஐடி விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago