தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த அரசியல் களத்தின் சமன்பாடுகளும் தலைகீழாகப் புரண்டு போயுள்ளன. திமுகவின் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கவும், தவெக-வை எதிர்கொள்ளவும் திமுக, பாஜக மற்றும் பிற கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கத் திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறது. மற்றொரு புறம், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத் தூண்கள் திமுகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
திமுகவின் ‘சூப்பர்பாஸ்ட்’ எக்ஸ்பிரஸ் வியூகம்
தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒரே நேரத்தில் மத்திய அரசையும் (பாஜக), மாநில அரசையும் (தவெக) பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதை திமுக சீனியர்கள் உணர்ந்துள்ளனர். கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற முக்கியத் தலைவர்கள் மீது ஈடி, ஐடி, சிபிஐ வழக்குகள் இருப்பதால், மத்திய அரசுடன் இணக்கமாகப் போவதே நல்லது எனத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மைசூரில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரப்பிலிருந்து பாஜகவின் தூதுவர் ஒருவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘மகளிர் இடஒதுக்கீடு’ போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திமுகவின் 30 எம்பிக்களின் ஆதரவுடெல்லிக்குத் தேவைப்படுகிறது. இதற்குப் பிரதிபலனாக திமுக மீதான வழக்குகளின் தீவிரம் குறைக்கப்படும் என்றும், விருப்பப்பட்டால் மத்திய அமைச்சரவையிலும் இடம் தரப்படும் என்றும் ஆஃபர் தரப்பட்டுள்ளது.
இழப்புகளை ஈடு செய்ய பாஜகாவுடன் சேர்த்து பாமக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளையும் இணைத்து ஒரு மெகா கூட்டணி அமைக்கத் திமுக ஆலோசித்து வருகிறது.
