https://republictn.com/

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல்களும் பதவிப் பறிப்புகளும், அக்கட்சியின் தூண்களாக விளங்கிய முக்கியத் தலைவர்களைக் கடுமையான விரக்திக்குத் தள்ளியுள்ளன. காலங்காலமாகத் திராவிட அரசியல் களத்தில் பரம எதிரிகளாக மோதிக்கொண்ட திமுகவும் அதிமுகவும், தற்பொழுது புதிய ஆளுங்கட்சியான தவெக-வின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளத் தத்தமது வியூகங்களை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வலது மற்றும் இடது கரங்களாக, கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்திகளாக வலம் வந்த எஸ்பி. வேலுமணி, தங்கமணி மற்றும் சென்னை, புதுக்கோட்டை மண்டலங்களின் முகங்களாக விளங்கிய ஜெயகுமார், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தற்பொழுது அறிவாலயம் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். அதிமுகவில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கும், இழந்த பதவிகளுக்கும் பழிதீர்க்கும் விதமாகவும், தங்களது அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இபிஎஸ்-இன் தளகர்த்தாக்கள் திமுகவுடன் நடத்தி வரும் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தாக்களாகவும், கொங்கு மண்டலப் பாதுகாப்பாளர்களாகவும் விளங்கிய எஸ்பி. வேலுமணி, தங்கமணி மற்றும் சென்னை மண்டல ஜெயகுமார், புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திமுகவை நோக்கி நகரப் பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்துள்ளன.

மன உளைச்சலில் வேலுமணி
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவில் முக்கியப் பதவிகள் பறிபோனதாலும், துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டதாலும் வேலுமணி கடும் அதிர்ப்தியில் உள்ளார். “திமுகவிற்கு வந்தால் கொங்கு மண்டலத் தளபதி பதவி உங்களுக்கே” என்று திமுக தரப்பிலிருந்து அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

கட்சியில் தங்கமணியின் அதிகாரம் பறிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராக மட்டுமே ஆக்கப்பட்டதால் விரக்தியில் உள்ள அவருக்கு, மாவட்டப் பொறுப்பு ஆபர் தரப்பட்டுள்ளது. தவெக-வில் இடம் கிடைக்காத விஜயபாஸ்கரும் அறிவாலயம் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார். தலைமைக்குக் கட்டுப்படாமல் ஒதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு, திமுகவில் மாவட்டப் பொறுப்புடன் எதிர்காலத்தில் அமைச்சர் பதவியும் தருவதாக மாஜி அமைச்சர் ஒருவர் தூது அனுப்பியுள்ளார். எஸ்.பி.வேலுமணி திமுகவுக்கு வந்தால், கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி வெளியேறி கரூர் பக்கம் திரும்புவதாகவும் கூறப்படுகிறது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago