புதுச்சேரி-திருக்கனூர் மற்றும் காட்டேரிக்குப்பம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இளைஞர்கள், பெண்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் ராஜ்குமார், கலந்து கொண்டார். கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து, முன்னேற்றியவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்தும் காலில் விழுந்து வணங்கியும் இளைஞர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் ராஜ்குமார், ”வாழ்க்கையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம் என்று நம்பிக்கையூட்டினார். 16 ஆண்டுகள் கடமைக்காக படித்தாலும் ஓராண்டு தனக்காக படிக்க வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக் கொண்ட அவர், விவசாயம் சிறந்த தொழில்தான் இருந்தாலும் அதையே செய்து கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் மரியாதை இருக்காது. அதிகாரத்திற்கு வர வேண்டும். அதற்கு அரசு வேலை மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் இளைஞர்களை கொல்லும் மிகப்பெரிய அழிவாயுதம். எனவே அவற்றை விட்டு எறிந்து, விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்கலாம்” என்றும் உத்வேகப்படுத்தினார்.
சக்திவேல், சிறப்பு நிருபர், புதுச்சேரி
