https://republictn.com/

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற வைகாசி பௌர்ணமி கிரிவலத்தின் போது, தருமபுரியைச் சேர்ந்த திருமணமான பெண் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஆகிய இருவர் தனித்தனியாக கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்களை காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்ற குற்றவாளிகள், அவர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன், அணிந்திருந்த நகைகளையும் பறித்துள்ளனர். மேலும், ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி வாசுதேவன் மற்றும் 16 வயது சிறுவன் உட்பட 8 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்தவர்களைத் தேடி வந்த நிலையில், விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டியன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய நபர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago