தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை அறிக்கைகள் முதல்வர் விஜய் அவர்களின் பார்வைக்குச் செல்லும் முன்பே சில குறிப்பிட்ட நபர்களால் முன்கூட்டியே படிக்கப்படுவதாக உளவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கப் போலீஸ் உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக, உளவுத்துறை ஐ.ஜி வழியாக இந்த ரகசிய அறிக்கை வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை முதல்வரின் பார்வைக்கு நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும். இதன் மூலமே அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் அறிந்துகொள்ள முடியும்.
கடந்த காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலாவும், திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினுக்கு முன்பாக அவரது மருமகனும், ஒரு தனியார் நிறுவன இயக்குநரும் இந்த உளவு அறிக்கைகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த காலங்களில் அரசின் பல ரகசியங்கள் கசிந்தன.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக ஆட்சியில், அமைச்சர்களைக் கண்காணிக்கத் தனிச் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த அறிக்கைகள் முதலில் முதல்வர் விஜயின் மேஜைக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டரீதியாக முதல்வர் அல்லது அரசு அதிகாரப்பூர்வமாக நியமித்த உதவியாளர் தவிர வேறு யாரும் இந்த அறிக்கையை முதல்வர் பார்ப்பதற்கு முன்பாகப் பார்க்கக் கூடாது. தற்போதைய நிலையில் முதல்வருக்குத் தனி உதவியாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் முதல்வர் விஜய் பார்வைக்கு அறிக்கை செல்லும் முன்பே 3 முக்கிய நபர்கள் அதனைப் பார்வையிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
முதல்வரின் தனிப்பட்ட வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தற்போது அடிக்கடி தலைமைச் செயலகத்திற்கு வருவதோடு, முதல்வர் பார்வைக்கு உளவு அறிக்கை செல்லும் முன்பே அதைத் தான் பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சில விவகாரங்களுக்கு அவர் நேரடியாக உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.
தவெக அமைச்சரவையில் உள்ள ஒரு சீனியர் அமைச்சர், உளவுத்துறை அறிக்கையைத் தனக்கு முன்கூட்டியே அனுப்பக் கோரி அழுத்தம் கொடுத்து வருகிறார். பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரி: முதல்வரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு உயர் அதிகாரியும் இந்த ரகசிய அறிக்கையைத் தனது வாட்ஸ்அப் மூலமாக அனுப்பச் சொல்லி கேட்டு வாங்குவதாகத் தெரிகிறது.
முதல்வர் விஜய் அவர்களின் பார்வைக்குச் செல்லும் முன்னரே, உளவுத்துறை அறிக்கையைக் குறுக்கு வழியில் புகுந்து படிக்கத் துடிக்கும் இந்த மூன்று பேர் கொண்ட அணியால், தவெக அரசின் மிக முக்கிய ரகசியங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் வெளியில் கசிந்து போவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
