தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகி, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை கூட்டியுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், அனைவரது கவனமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதே திரும்பியுள்ளது. திமுக-வின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட கட்சியின் மூத்த மற்றும் சீனியர் தலைவர்கள் அனைவரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, தென் மாவட்ட மக்களின் ஆதரவோடு நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்றும், அவரைத் தேர்ந்தெடுத்துக் கோட்டைக்கு அனுப்பத் தென் மாவட்ட மக்கள் ஆவலோடு தயாராக இருக்கிறார்கள் என்றும் அப்பாவு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் தினமும் ஸ்டாலினைச் சந்தித்து இதனை வலியுறுத்தி வரும் வேளையில், அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களைச் சந்திக்கும் போது ஸ்டாலின் இதுகுறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார். “இடைத்தேர்தலில் என்னைப் போட்டியிடச் சொல்கிறார்கள், நான் என்ன முடிவு எடுக்கலாம்?” என்று அவர் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது
ஒருபுறம் நிர்வாகிகள் போட்டியிடச் சொல்லி வற்புறுத்தினாலும், ஸ்டாலினின் நெருங்கிய நலம் விரும்பிகளோ, “தற்போதுள்ள அரசியல் சூழலில் இடைத்தேர்தலில் தலைவர் நேரடியாகப் போட்டியிடக் கூடாது” என்று தங்களின் மாற்று ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் முன்வைத்து வருகிறார்களாம்.
இடைத்தேர்தல் வரவிருக்கும் ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ள வேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்கிற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியலில் எகிறத் தொடங்கியுள்ளது.
